தெய்வப்புலவர் திருவள்ளுவர்



திருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமானதிருக்குறளை இயற்றிய புலவர். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர  நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.

திருவள்ளுவர் வரலாறு
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர்.அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
திருவள்ளுவர் காலம்:
          அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:
திருவள்ளுவரது வேறு பெயர்கள்

v  நாயனார்
v  தேவர்
v  தெய்வப்புலவர்
v  பெருநாவலர்
v  பொய்யில் புலவர்
v  நான்முகனார்
v  மதனுபங்கி
v  செந்நாப் போதார்
v  பொய்யாப்புலவர்
‘குறள்’ பெயர் வரலாறு:
திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால்  குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்
நூல் அமைப்பு:
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்:
        திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
அறத்துப்பால்
·         பாயிரம்
·         இல்லறவியல்
·         துறவறவியல்
·         ஊழியல்
பொருட்பால்
·         அரசியல்
·         அமைச்சியல்
·         அரணியல்
·         கூழியல்
·         படையியல்
·         நட்பியல்
·         குடியியல்
காமத்துப்பால்
·         களவியல்
·         கற்பியல்

பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
                             1.        எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு
                           2.        பதினெண்கீழ்க்கணக்கு
                           3.        ஐம்பெருங்காப்பியங்கள்
                           4.        ஐஞ்சிறு காப்பியங்கள்
இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறள் சிறப்பு பெயர்கள்:
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்:
Ø  திருக்குறள்
Ø  முப்பால்
Ø  உத்தரவேதம்
Ø  தெய்வநூல்
Ø  பொதுமறை
Ø  பொய்யாமொழி
Ø  வாயுறை வாழ்த்து
Ø  தமிழ் மறை
Ø  திருவள்ளுவம்
என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் உரை:
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் அரங்கேற்றம்:
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.  மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருவள்ளுவமாலை:
வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்: 
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” 

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி- 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல்- 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்
இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது. ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்
திருக்குறள்:
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
திருக்குறள் காலம்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.


வாசுகிசெல்வச் செழிப்புமிக்க நிலச்சுவான்தார் மகளாகப் பிறந்தவள் வாசுகி. இளம் பருவத்திலேயே சாவித்ரி, அனுசூயை போன்ற கற்புக்கரசிகளின் சரிதங்களை அறிந்து அவ்வாறே வாழவேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தாள்.வள்ளுவர் என்ற இயற்றமிழ் வித்தகரை வாசுகி மணந்தாள். இருவரும் மயிலாப்பூரிலே இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள். நடராஜப் பெருமானிடம் பக்தி கொண்டிருந்த வள்ளுவரையே, வாசுகி தெய்வமாகக் கொண்டாடினாள். அவருடைய சொல்லே அவளுக்கு வேதமாக இருந்தது.


துணி நெய்யும் நெசவுத் தொழிலை வள்ளுவர் செய்துவந்தார். அவர், தாம் இயற்றிய திருக்குறளிலே ‘இல்வாழ்க்கை’ என்ற அதிகாரத்தில் இல்லறத்தின் சிறப்பைக் கூறியிருக்கிறார்.“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.”துறவிகளுக்கும் எளியவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இல்லறத்தில் இருப்பவரே துணையாகிறார்கள். வாசுகி, வள்ளுவரின் இல்லறம், அவர் குறளில் கூறியவாறே அன்பும் அறனும் உடையதாகி பண்புடனும் பயனுடனும் அமைந்திருந்தது.


எளிய வாழ்க்கை; மகிழ்ச்சிகரமான தம்பதி. ஊரெங்கும் இவர்களுடைய அன்யோன்யமான இல்லறத்தைப் பற்றிய புகழ் பரவியது. கொங்கணர் என்ற சித்தர் ஒருவர், வாசுகியின் இல்லற மாண்பை நேரில் சென்று காண விரும்பினார். மயிலாப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.வானத்தில் பறந்து கொண்டிருந்த கொக்குக் கூட்டத்திலிருந்து ஒரு கொக்கு எச்சமிட்டது. அது நடந்து சென்ற கொங்கணரின் உச்சந்தலை மீது விழுந்தது. கோபம் கொண்ட கொங்கணர் எச்சமிட்ட கொக்கைப் பார்த்தார். அவருடைய தவவலிமையால் அவரது பார்வையே அந்தப் பறவையை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. பின்பு வாசுகி-வள்ளுவர் இல்லத்துக்குச் சென்றார். அவர் ஒரு சன்யாசிக்குரிய கோலத்துடன் வள்ளுவரின் இல்லத்தின் முன்பு வந்து “தாயே! அன்னமிடுங்கள்” என்று கேட்டார். வாசுகியின் விருந்தோம்பும் பண்பைச் சோதிக்க விரும்பினார். வள்ளுவர், தாம் இயற்றிய திருக்குறளில் விருந்தோம்பலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருக்கிறாரே!“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.”வீட்டில் பொருள்களைச் சேர்ப்பது, விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்காகவே என்று வலியுறுத்தியிருப்பவரின் மனைவியின் குணம் எத்தகையது என்று அறிய கொங்கணர் விரும்பினார். அதற்காகவே சந்யாசியாக வந்தார்.


“தாயே! அன்னமிடுங்கள்” என்று குரல் கேட்டால், உடனே இல்லத்தரசியர் அன்னமோ, அரிசியோ கொண்டு வந்து அளிப்பது வழக்கம். ஆனால் கொங்கணர் குரல் கொடுத்து சில நிமிடங்கள் ஆன பிறகும் எவரும் வரவில்லை.


அந்த நேரத்தில் வள்ளுவர் உணவருந்திக் கொண்டிருந்தார். உணவு பரிமாறுவதிலும் அருகில் அமர்ந்து விசிறியால் விசிறுவதுமாக வாசுகி பதிசேவையில் ஈடுபட்டிருந்தாள். கொங்கணரின் அழைப்பு அவளுக்குக் கேட்டது. ஆயினும் உடனே செல்ல இயலவில்லை. சற்று நேரம் தாமதித்த பின்பே உணவு வட்டிலுடன் வெளியே வந்தாள். கொங்கணர் அதற்குள் பொறுமை இழந்தார். வாசுகி வெளியில் வந்ததும் அவளைத் தீவிழியால் பார்த்தார். அவளோ முகத்தில் முறுவல் பூத்தவளாக, “என்னையும் கொக்கு என்று நினைத்தீரோ? கொங்கணரே!” என்று கேட்டாள். கொங்கணர் திகைப்புற்றார்.


‘நான்கு சுவர்களுக்குள் வாழும் இப்பெண்மணி வெகு தொலைவில் நான் வரும் வழியில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறாளே! கொக்கை எரித்தது போல என்னையும் எரிக்கலாம் என்று நினைத்தீரோ என்று கூறாமல் கூறிவிட்டாளே!’ என வியந்தார்.


உடனே கொங்கணர் பணிவுடன், “மன்னிக்க வேண்டும். திருக்குறளை எழுதிய வள்ளுவரும் அவர் மனையாள் வாசுகியும் நடத்தும் இல்லற வாழ்வின் சிறப்பைப் பற்றிக் கேள்வியுற்றேன். நேரில் அறிய ஆவலுடன் வந்தேன். இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே தெளிவாகத் தெரிந்து விட்டது” என்று உரைத்தார்.“வாருங்கள். உள்ளே வந்து அமருங்கள். உணவருந்தலாம்.” என்று வாசுகி அழைத்தாள். உள்ளே வந்த கொங்கணர் வள்ளுவரைக் கண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சில தினங்கள் அவர் இல்லத்தில் கொங்கணர் தங்கினார்.


ஒருநாள் கொல்லைப் புறத்தில் வாசுகி கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அப்போது ‘வாசுகி’ என்று வள்ளுவர் அழைத்தார். அழைப்பைக் கேட்டதும் வாசுகி இறைத்துக் கொண்டிருந்த கயிற்றை விட்டாள். குடம் நீருடன் பாதியளவில் வருவதைப் பற்றிய நினைவின்றி அப்படியே வீட்டினுள்ளே சென்றாள். கொங்கணர் ஆச்சர்யத்துடன் பார்த்தார். குடம் கிணற்றுக்குள் விழாமல் தொங்கியபடி அப்படியே இருந்தது. வாசுகி திரும்பி வந்து கயிற்றை இழுத்து குடத்தை எடுக்கும் வரை அவ்வாறே இருந்தது.மற்றொரு நாள், காலையில் வள்ளுவர் பழையமுது சாப்பிட அமர்ந்தார். வாசுகி ‘வீசு’ என்றதும் வாசுகி விசிறியுடன் வந்து வீசிய போது, பழையமுதிலிருந்து ஆவி பறந்ததை கொங்கணர் நம்ப முடியாத வியப்புடன் நோக்கினார்.


கணவர் சொல்லே வேதம் என்று வாழ்ந்து வரும் வாசுகியை நோக்கியபோது கொங்கணருக்கு குறள் நினைவுக்கு வந்தது.“தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.”கணவனே தெய்வமாக வாழ்பவள் வாசுகி. அவள் கணவர் சொல்லியது எதையும் மீறி நடந்ததில்லை. தினந்தோறும் வள்ளுவர் சாப்பிட அமரும் போது சிறுகிண்ணத்தில் நீரும் அருகில் ஊசியும் வைக்க வேண்டும் என்பது அவரது நிபந்தனை. அதை காரண காரியம் கேட்காமலே செய்து வந்தாள் வாசுகி.காலங்கள் கடந்தன. இருவரும் வயோதிகம் அடைந்தார்கள். வாசுகி தன் இறுதிக் காலத்தில் அருகில் இருந்த கணவரிடம் “ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.” என்றாள். வள்ளுவர் “கேள்” என்றார்.“தினமும் நீங்கள் சாப்பிடும் போது அருகில் கிண்ணத்தில் நீரும் ஊசியும் எதற்காக வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்ட வாசுகியைப் பார்த்து,“நம்முடைய முன்னோர் உணவை வீணாக்கக் கூடாது என்று கூறிச் சென்றார்கள். உணவு பரிமாறும் போது ஒரு பருக்கை கீழே சிந்தினாலும் அதை ஊசியால் எடுத்து நீரில் சுத்தம் செய்து உண்பதற்காகவே வைக்கச் சொன்னேன். ஆனால் நீ ஒரு நாளும் உணவைச் சிந்தியதில்லை. எனவே அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் எனக்கு நேரவில்லை.” என்றார் வள்ளுவர்.


இந்த விளக்கத்தைக் கேட்டு வாசுகி மகிழ்ந்தாள். “வள்ளுவருக்கேற்ற வாசுகி போல்” என்று மணமக்களை வாழ்த்துவது வழக்கம். பதிக்கேற்ற பத்தினியாக வாழ்ந்து காட்டியவள் வாசுகி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக